ஆர்செலார் மிட்டலின் ஒரிஸ்ஸா தொழிற்சாலைப் பணிகள் இடைநிறுத்தம்
மும்பை: சர்வதேசட அளவில் ஸ்டீல் தேவை மிகவும் குறைந்துவிட்டதால், ஒரிஸ்ஸாவில் ரூ.40000 கோடி செலவில் அமைக்கவிருந்த புதிய தொழிற்சாலைப் பணிகளை இரு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட்டுள்ளது ஆர்செலார் மிட்டல் நிறுவனம்.
உலகின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலார் மிட்டல், பிரிட்டன் வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலுக்குச் சொந்தமானது.
ஒரிஸ்ஸாவில் 12 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தித் திறன் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு 2005-ல் அனுமதி பெற்றது ஆர்செலார் மிட்டல். இந்த திட்டத்தின் அப்போதைய மதிப்பு ரூ.40000 கோடி.
அதேபோல ஜார்கண்டில் இரும்புத் தாது எடுக்கும் தொழிற்சாலையையும் அமைத்து வருகிறது இந்த நிறுவனம். ஒரிஸ்ஸா தொழிற்சாலைகளுக்கான பணிகளைத் துவங்க ஆயத்தமான நிலையில், திடீரென்று இந்த தொழிற்சாலைத் திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு ஒத்திப் போடுவதாக அறிவித்துள்ளார் லட்சுமி மிட்டல். சர்வதேச அளவில் ஸ்டீலுக்கு தேவை மிகவும் குறைந்துவிட்டதாலேயே இந்த ஒத்தி வைப்பு என அவர் காரணம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு உண்மையான காரணம், ஆர்செலர் மிட்டல் தொழிற்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே என்று மீடியா தெரிவித்துள்ளது. ஒரிஸ்ஸா பழங்குடிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி அங்கே நிலம் கையகப்படுத்த முடியாததாலேயே திட்டத்தை மிட்டல் ஒத்திப்போட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திட்டம் 2005-ல் அறிவிக்கப்பட்டபோது போடப்பட்ட மதிப்பீட்டை விட இப்போது மேலும் 9 பில்லியன் டாலர்கள் கூடுதலாகத் தேவைப்படுவதால், மிட்டல் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.