ரயில்களில் 'சைட் மிடில் பெர்த்' நீக்கம்-முன்பதிவு நிறுத்தம்
சென்னை: பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பக்கவாட்டு நடுப் படுக்கை வசதியை ரயில்வே நீக்கி விட்டது. இதற்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.
தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிதாக, லாலு பிரசாத் காலத்தில், பக்கவாட்டு நடுபடுக்கை அறிமுகம் செய்யப்பட்டது.
பயணிகள் இடம் கிடைக்காமல் அல்லல்படுவதை குறைப்பதற்காக பக்கவாட்டில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி அளிக்கப்பட்டது
ஆனால் ஒரு பெட்டியில், ஏற்கனவே உள்ள 2 படுக்கைக்கு நடுவே கூடுதலாக படுக்கை வசதி பொறுத்தப்பட்டதால் ஒரு பெட்டியில் கூடுதலாக 9 பேர் பயணம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பல சிரமங்கள் ஏற்பட்டன.
குறிப்பாக பக்கவாட்டு கீழ் படுக்கை மற்றும் மேல் படுக்கை வாசிகளுக்கு நடுவில் சிக்கி எலி போல தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது பயணிகளுக்கு.
உடம்பை குறுக்கி, கூனிப் போய் பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டது. காசையும் கொடுத்து இப்படி கஷ்டத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டுமா என்று பயணிகள் புலம்பினர்.
இந்த படுக்கை வசதியை நீக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் லாலு நிர்வாகம் வழக்கம் போல சப்பைக் காரணத்தைக் கூறி இதை அகற்றாமல் காசு பார்த்து வந்தது.
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக மக்களை வாட்டி வதைத்து வந்தது இந்த பக்கவாட்டு படுக்கை வசதி (இதை பக்கவாத படுக்கை வசதி என்று கூட கூறலாம் - அந்த அளவுக்கு இந்தப் படுக்கையில் படுப்பவர்களை அது முடக்கிப் போட்டு வைத்திருந்தது).
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்குள் பக்கவாட்டு படுக்கை அகற்றப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது பக்கவாட்டு நடுப் படுக்கைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக முன்பதிவும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இன்று முதல் முன்பதிவு நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.