திட்டமிட்டபடி பாலாற்றில் அணை- ஆந்திரா
ஹைதராபாத்: திட்டமிட்டபடி பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று ஆந்திர அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகாவைச் சேர்ந்த கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது ஆந்திரா.
இதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஆந்திர அரசு தொடர்ந்து அது தொடர்பான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது கால்வாய் தோண்டும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திராவுடன் தண்ணீர்ச் சண்டை ஏற்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில பெரும் பாசனத் துறை அமைச்சர் பொன்னால லட்சுமய்யாவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இதுவரை இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக சுமூகமாக பேசித் தீர்க்குமாறுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அணை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று முதல்வருக்கு எடுத்துக் கூறப்பட்டதாம். இதையடுத்து திட்டமிட்டபடி பணிகள் தொடரட்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.
இதையடுத்து ரூ. 55 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகளை திட்டமிட்டபடி தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர் ஆந்திர அதிகாரிகள்.
நேற்று தான் அணை கட்ட ஆரம்பிக்கவில்லை என்று லட்சுமய்யா கதை விட்டது குறிப்பிடத்தக்கது.