உபி காங் தலைவி பேச்சு-வருத்தம் தெரிவித்த சோனியா
டெல்லி: உ.பி. முதல்வர் மாயாவதி குறித்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரீட்டா பேசியது தொடர்பாக அவரிடம் சோனியா விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்த காங்கிரஸ் வட்டாரம், ரீட்டாவை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மாயாவதியை தரக்குறைவாக பேசியதாக கூறி ரீட்டா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டை பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநில நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து நடந்தது என்ன என்பது குறித்து விசாரித்தார்.
ரீட்டா கைது மற்றும் அவரது வீடு கொளுத்தப்பட்டது குறித்து அவர் வேதனையும், அதிருப்தியையும் அவர்களிடம் வெளியிட்டார்.
அதேசமயம், ரீட்டாவின் பேச்சுக்காக தான் வருத்தமடைந்துள்ளதாகவும் சோனியா கூறினார். ரீட்டா ஜாமீனில் வெளியே வந்ததும் அவரிடம் தான் விளக்கம் கேட்கப் போவதாகவும் சோனியா கூறினார்.
இருப்பினும் ரீட்டாவின் விளக்கத்தைக் கேட்பதற்கு முன்பாக அவரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரீட்டாவின் பேச்சு அடங்கிய சிடியை அளிக்குமாறும் உ.பி. நிர்வாகிகளிடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளாராம்.