திமுக-அதிமுகவினர் மோதல்-206 பேர் கைது!
கோவை: இலவச கலர் டிவி வழங்குவது தொடர்பாக மறியலில் ஈடுபட்டு மோதிக் கொண்ட 206 திமுக-அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் முதல் கட்டமாக இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டது. 2வது கட்டமாக டி.வி. வழங்க வார்டு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான பயனாளிகளை தேர்ந்தெடுக்க அந்தந்த வார்டு கவுன்சிலர், கிராம நிர்வாக அதிகாரி, பில் கலெக்டர், தலைமை ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்து டோக்கன் வழங்கி வருகிறார்கள்.
இந் நிலையில் 71வது வார்டு அதிமுக கவுன்சிலர் கணபதி ராஜ்குமார் டோக்கன் வழங்குவதை தாமதப்படுத்துவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
அம்பேத்கார் காலனி பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்க கவுன்சிலர் கணபதி ராஜ்குமார் சென்றார். அப்போது முறையாக டோக்கன் வழங்கவில்லை என்று திமுக வார்டு செயலாளர் சாந்தி பன்னீர் செல்வம் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் டோக்கன் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது.
டோக்கன் வழங்க விடாமல் தடுப்பதாக கூறி கவுன்சிலர் கணபதி ராஜ்குமார் மற்றும் அதிமுகவை சேர்ந்த பால்ராஜ், செல்வராஜ், பிரேமா, விசுவநாதன் மற்றும் பலர் கணபதி பஸ் நிலையம் அருகே சத்தி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர்.
அதே போன்று, சாந்தி பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் அதே இடத்தில் வந்து சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கோவை உதவி போலீஸ் கமிஷனர் கோபால்சாமி, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனால் இதை இரு தரப்பும் ஏற்கவில்லை. மேலும், இரு தரப்பினர் இடையே கடும் வாக்கு வாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, திமுக-அதிமுகவைச் சேர்ந்த 206 பேரை போலீசார் கைது செய்தனர்.