கள்ள நோட்டுக்களைக் கொடுத்து ஆடுகளை வாங்கி நூதன மோசடி
நாகர்கோவில்: ஆடுகளை வாங்கி விட்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள பத்துகாணி மேலகற்றுவா என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராகினி. கடந்த 15ம் தேதி இவரது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்தனர். அவர்கள் தங்களுக்கு விலைக்கு ஆடுகள் வேண்டும், உடனடியாக பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று ராகினியிடம் கேட்டனர்.
உடனடியாக பணம் கிடைத்து விடும் என்பதால் ராகினியும், தன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை விற்க முடிவு செய்தார்.
7 ஆடுகளை அவர்களிடம் விற்றார். அதற்கு அவர்கள் ரூ.20 ஆயிரம் கொடுத்தனர். அவை அனைத்தும் 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அந்த பணத்தின் மூலம் பத்துகாணியில் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்க முடிவு செய்தார். பணத்தை எடுத்து கொண்டு நிதி நிறுவனத்திற்கு சென்றார்.
பணத்தை சோதித்த பார்த்த ஊழியர்கள் அந்த பணம் கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்து ராகினியிடம் திரும்ப கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த ராகினி ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல மேலபத்துகாணியை சேர்ந்த கமலம் என்ற பெண் 2 ஆடுகளை விற்று ரூ.5 ஆயிரம் வாங்கியுள்ளார். அந்த பணமும கள்ள நோட்டுகளாக இருந்தன. இவரையும் ராகினியை ஏமாற்றிய கும்பலே ஏமாற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.
கமலமும் தான் ஏமாற்றபட்டது குறித்து ஆருகாணி போலீசில் புகார் செய்தார். புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகிறார்.
ஆடுகளை வாங்கி விட்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ள நோட்டு கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அந்த கும்பலுக்கு ஆடுகள் வாங்கி கொடுத்த ஆடு புரோக்கர் சுகுமாரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications