குளித்தலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் நீக்கம்
குளித்தலை: குளித்தலையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கல்வியில் பின்தங்கி இருந்த அதிருப்தி காரணமாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனால் அவரை பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குளித்தலையில் உள்ள பாரதி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 22 மற்றும் 29 ம் தேதிகளிலும், கடந்த 15 ம் தேதியும் மர்ம போன் மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போது போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி போன் தகவல் புரளி என்பதை உணர்ந்தர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு நான்காவது முறையாக மர்ம போன் வந்துள்ளது. அப்போது போனில் பேசிய மர்ம குரல் பள்ளிக்கு விடுமுறை அளிக்காவிட்டால் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு லைன் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து குளித்தலை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் பள்ளி தாளாளர் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்.ஐ. ஸ்ரீதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், நான்காவது முறையாக வந்த அழைப்பு, முசிறியில் உள்ள ஜெயன் சலூனில் இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
உடனடியாக அங்கு போலீசார் விசாரணை செய்த போது அருகில் சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் மாணவன் அரவிந்தன் (14), என்பவன் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒன்பதாவது படிக்கும் மாணவன் அரவிந்தன், கல்வியில் பின்தங்கி இருந்ததால், சமீபத்தில் வகுப்பில் செக்ஷன் மாற்றி அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தாக ஒப்புக் கொண்டார். மாணவன் அரவிந்தன், தந்தை சின்னையா மற்றும் உறவினர்கள் மன்னிப்புக் கோரினர்.
இதனையடுத்து, மாணவன் அரவிந்தன் எதிர்கால நலன் கருதி மன்னிப்பு வழங்கி பெற்றோரிடம் அவரை ஒப்படைக்க எஸ்.பி. தினகரன் உத்தரவிட்டார். இதன்படி பெற்றோரிடம் அரவிந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவன் அரவிந்தனை பள்ளியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications