பாரபட்சம்... பிரதமரிடம் அனில் அம்பானி புகார்!
டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது சகோதரரும் தொழில் போட்டியாளருமான முகேஷ் அம்பானிக்கு மட்டும் அதிக சலுகை காட்டி பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார் அனில் அம்பானி. இதுகுறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.
கிருஷ்ணா - கோதாவரி படுகையில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸ் லிமிடெட் (ஆர்என்ஆர்எல்) இடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனில் அம்பானிக்கு ஆதரவாக கடந்த வாரம் தீர்ப்பளித்தது மும்பை நீதிமன்றம்.
ஆனால் இதே வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்த போது, முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் ஆர்ஐஎல் மற்றும் ஆர்என்ஆர்எல் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
எரிவாயு என்பது முழுக்க மத்திய அரசுக்கே சொந்தமானது என்றும், ஏதோ குடும்பச் சொத்து போல அம்பானிகள் பிரித்துக் கொள்ள நினைப்பு சட்டவிரோதம் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
இது அனில் அம்பானியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் அனில் அம்பானி இந்தப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு சலுகை காட்டி அவருக்கு சாதகமாகவும் தமக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டை உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த எரிவாயுவை எடுத்துக் கொடுப்பது மட்டுமே ரிலையன்ஸ் வேலை என்றும், அதனை யாருக்க விற்பது, எந்த விலைக்கு விற்பது போன்றவற்றை அரசு தீர்மானிக்கும் என்றும் முகேஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.
வழக்கு ஒத்தி வைப்பு
இதற்கிடையே, வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனில் அம்பானிக்காக ராம் ஜெத்மலானி வாதாடினார்.
பின்னர் வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அப்போது கேஜி படுகை எரிவாயு தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications