வள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து பந்த்-கன்னட அமைப்புகள்
வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்றும், 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞர் சிலையை நான் திறந்து வைப்பேன் என்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், காவிரி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய விஷயங்களில் தமிழகத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந் நிலையில் வள்ளுவர் சிலையைத் திறப்பதை எதிர்க்கும் முதல் நபர் நான் தான்.
கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்கள் பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கும் அளவுக்கு தைரியம் பெற்றுவிட்டனர். பெங்களூரையே தமிழ் மண்டலமாக மாற்ற திட்டமிடுகின்றனர்.
சென்னையில் சர்வஞரின் சிலையைத் திறக்க தமிழக மக்களுக்கு ஆர்வம் இல்லை. அந்தச் சிலையை வைக்கச் சொன்னது கர்நாடக அரசு. அதை செதுக்கித் தந்ததும் மாநில அரசு தான்.
எங்கள் எதிர்ப்பை மீறி வள்ளுவர் சிலையைத் திறந்தால் மாநிலம் தழுவிய பந்த் நடத்துவோம் என்றார்.
கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில், தமிழகத்துடன் பல்வேறு விஷயங்களில் நாம் மோதி வருகிறோம். கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் மத்திய அரசி்ன் திட்டத்துத்துக்கு தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காந்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கன்னட மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து ரூ. 15 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கால் அந்தப் பணம் வருவது தடைபட்டுள்ளது.
அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு காந்தியை தமிழக அரசு நெருக்க வேண்டும். ஒகேனக்கல் பகுதி யாருக்கு என்பது குறித்த சர்வே முடியும் வரை குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கூடாது.
சென்னையில் முக்கியமான இடத்தில் சர்வஞரின் சிலையை நிறுவ வேண்டும். வள்ளுவர் சிலையை முதல்வர் திறந்தால் அதன் பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு எதியூரப்பாவே பொறுப்பு என்றார்.