ரீட்டா வீட்டை எரித்தவருக்கு மாயாவதி 'பரிசு'!
டெல்லி: உ.பி. காங்கிரஸ் தலைவி ரீட்டா பகுகுணா ஜோஷியின் வீட்டை எரித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கு, வாரியத் தலைவர் பதவி அளித்து கெளரவித்துள்ளார் முதல்வர் மாயாவதி.
முதல்வர் மாயாவதி குறித்து தரக்குறைவாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் ரீட்டா. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் லக்னோவில் உள்ள ரீட்டாவின் வீட்டை தீவைத்து எரித்தனர்.
இந்த நிலையில் இந்த தீவைப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவராக கூறப்படும் பகுஜன் சமாஜ் எம்.பி. இந்தசார் அப்தி என்பவருக்கு உ.பி. மாநில சர்க்கரைக் கழக துணைத் தலைவர் பதவியைக் கொடுத்துள்ளார் மாயாவதி.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரீட்டா பகுகுணா கூறுகையில், அப்தி தலைமையிலான கும்பல்தான் எனது வீட்டைத் தீவைத்துக் கொளுத்தியது.
இந்த நிலையில், இப்போது அப்திக்கு பரிசளிப்பது போல பதவியைக் கொடுத்துள்ளார் மாயாவதி. இதன் மூலம் தீவைப்பு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் வாதத்திற்கு வலு சேர்ந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியினர்தான் வீட்டை எரித்தனர் என்பதும் நிரூபணமாகியுள்ளது. உடனடியாக தீவைப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாயாவதியிடமிருந்து நீதி கிடைக்கும் என நான் நம்பவில்லை. சிபிஐ விசாரணையில் மட்டுமே நீதி கிடைக்கும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, எனது கட்சியும் வலியுறுத்துகிறது. அரசே தூண்டி விட்டுத்தான் எனது வீட்டைக் கொளுத்தினர்.
நான் மாயாவதி குறித்து கருத்துக் கூறியபோது கூறிய ஒரு வார்த்தையால் எனது கட்சித் தலைமை தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்காக வருத்தப்படுகிறேன். தனிப்பட்ட யாரையும், எந்த ஜாதியையும் இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவில்லை.
நான் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் உ.பி. அரசு செயல்படும் விதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications