மன்மோகன் சிங்-ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு
பாக். விவகாரம், தீவிரவாதம், இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் வீட்டுக்குச் சென்ற ஹில்லாரியை, மன்மோகன் சிங் வரவேற்றார். அவருடன் அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள டிமோத்தி ரோமர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்திக்கிறார் ஹில்லாரி.
இந்த சந்திப்பின் போது இரு தரப்புக்கும் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்.குக்கு தொடர்ந்து உதவுவோம் - ஹில்லாரி
முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய ஹில்லாரி, தீவிரவாதத்தை ஒழிப்பதில் உண்மையான ஆர்வத்துடன், துணிச்சலுடன் பாகிஸ்தான் செயல்படுகிறது. இதை நான் பார்க்கிறேன்.
பாகிஸ்தான் அரசு மீதும், மக்கள் மீதும்தான் தீவிரவாதிகள் தாக்குகின்றனர். இதை அந்த அரசும் புரிந்து வைத்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் அனைவரையும் நாம் ஆதரிக்க வேண்டும். அந்த அடிப்படையில் பாகிஸ்தானையும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும். அதுதான் எங்களது முன்னுரிமையாகும். இதை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்.
ஒரு நாட்டின் பலத்தை ராணுவ பலத்தைக் கொண்டு நிர்ணயிக்க முடியாது. ராணுவம் தவிர்த்த வேறு பலங்களும் உள்ளன. அந்தக் கோணத்தில்தான் இந்தியா இப்போது வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்றார்.