புலிகளுக்கு பிரபாகரன் அளித்த 'பக்கா' ராணுவக் கல்வி!!
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு ராணுவத்திற்கே உரிய கட்டுக்கோப்புடன் இயங்கி வந்த இயக்கம் என்பதை யாருமே மறுக்க முடியாது.
ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் வெகு அழகாக திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவத்தைப் போலவே இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பல நாட்டு உதவியுடன், ஒரு தனி மனிதனின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து விட்ட ராணுவம் தற்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைகளை நடத்தி ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அரசுக்கு மிக மிக முக்கியமான புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அது விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அடங்கிய மிகப் பெரிய ஆவணங்கள்.
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் மண்ணுக்குள் பெரிய பெரிய பேரல்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.
இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.
பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்...
இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்து கறந்துள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.
விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட் பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகள் பொருட்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த ஆவணங்கள்தான். கிட்டத்தட்ட புலிகள் அமைப்பின் செயல்பாடுகளை மொத்தமாக அறிந்து கொள்ள இது உதவுகிறது. உள்நாட்டில் அவர்களுக்கு இருந்த கட்டமைப்பு, வலையமைப்பு குறித்த முக்கியத் தகவல்கள் இதில் உள்ளன என்றார் அவர்.
கொழும்பில் புலிகளுக்கு இருந்த கட்டமைப்பு, நிதிஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் இதில் விரிவான தகவல்கள் உள்ளதாம்.
போராளிகளுக்கு முழுமையான ராணுவக் கல்வி...
பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியை அளித்திருக்கிறார்.
இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன்.
வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தன.
இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
பிரபாகரன் அவற்றைக் கொண்டு எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அவற்றில் அடக்கம்.
வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.
ஒரு நிலையான ராணுவத்துக்கு உரிய கட்டுக்கோப்புடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தனி ஒரு மனிதனாக அவர் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.
அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அந்த ஆவணங்களில் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட ஒரு புலியின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
புலிகள் இயக்கத்தை சாதாரண போராளி அமைப்பாக இல்லாமல், கிட்டத்தட்ட ஒரு நாட்டின் படையைப் போல நடத்தி வந்துள்ளார் பிரபாகரன் என்பது இந்த ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
நீர்மூழ்கி சிக்கியது...
இதற்கிடையே, கடலுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளது.
3 முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். முல்லைத்தீவு கடற்கரையில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில், கடலில், 40 அடி ஆழத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, முள்ளியவெளி கடல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ராணுவத்தின் இன்னொரு குழு கண்டுபிடித்துள்ளது.
புலிகளின் நீர்மூழ்கி சிக்கியது..
கடலுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளது.
3 முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். முல்லைத்தீவு கடற்கரையில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில், கடலில், 40 அடி ஆழத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, முள்ளியவெளி கடல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ராணுவத்தின் இன்னொரு குழு கண்டுபிடித்தது.