இடைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் கோரிக்கை
கோவில்பட்டி: சட்டசபை இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை நோக்கி அதிமுக போய்க் கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுக கூட்டணி தேர்தலைப் புறக்கணிக்கும் வாய்ப்புகளும் பெருகியுள்ளதாக கருதப்படுகிறது.
கோவில்பட்டியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில்சம்பத் பேசுகையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர்.
வருகின்ற இடைத் தேர்தலிலும் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் செயல்படுவர்.
எனவே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை விட அதிமுகவும், மதிமுகவும் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
பிரபாகரன் இறக்கவில்லை..
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், பிரபாகரன் இறக்கவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் டெல்லிக்கு செல்லவில்லை. காவிரி தண்ணீர் கோரி கர்நாடகத்துக்கு செல்லவில்லை. ஆனால், அமைச்சர் பதவி கேட்க மட்டும் டெல்லிக்கு செல்கிறார் என்றார் சம்பத்.












Click it and Unblock the Notifications