இடைத் தேர்தலிலும் அதிமுகவுடன் உறவு தொடரும் - நல்லகண்ணு
தூத்துக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சட்டசபை இடைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடி வந்த நல்லகண்ணு அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில்,
சட்டப்பேரவை இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும். இது தொடர்பாக ஜூலை 29, 30 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகளின் பலம் குறைந்துவிட்டதால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முயன்று வருகிறது. இதன் மூலம் முழு அதிகாரமும் தனியாரிடம் போய்விடும். வேலைவாய்ப்பு குறையும். தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். உற்பத்தி குறையும்.
இந்திய கம்யூ கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். மத்தியில் காங் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வரும் தண்ணீர் கடந்த ஜூன் மாதமே வரவேண்டியது. ஆனால் தற்போதுதான் வந்துள்ளது.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பின்தங்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதி நீர் பிரச்சனையில் இறுதி தீர்ப்பு வந்த பிறகும் கூட அதனை அமுல்படுததவில்லை. இதனை உடனே அமுல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் முழுமையாக சமசீர் கல்வி முறை அமுல்படுத்தவேண்டும். கல்வி நிறுவனங்களில் கட்டாய நிதி வசூல் தடுக்கப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தி இந்திய கம்யூ கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications