நக்ஸல் ஊடுருவல்: போலீஸ் மீது காங். பாய்ச்சல்
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரி்க்கைகள் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரி்ல் திரைப்படத் துறையினர் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது என்று மிரட்டினார்கள். ஆனால், அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டுக்கு வந்து போனார்கள். பிரிவினைவாதம் பேசியவர்களை மக்கள் புறக்கணித்து தேர்தலில் வெற்றி தேடித் தந்தார்கள்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். அவர்களை உளவுத்துறை முன்பே தடுத்து நிறுத்தியி்ருக்க வேண்டும். இந்த ஊடுருவலுக்கு காவல்துறையின் திறமை குறைவே காரணம். தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்க காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ரயிலைக் கடத்தியது யார் என்பதை விரைவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது மிகவும் தவறான செயல். வேலியே பயிரை மேய்வது கண்டிக்கத்தக்கது. அத்தகைய அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
கோவில், தேவாலாயங்களி்ல் கொள்ளைகள் நடக்கின்றன. அதைத் தடுக்க வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பை அரசு அதிகரிக்க வேண்டும்.
கோவையில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுபான விற்பனை ரூ. 10,000 கோடியை தாண்டியிருப்பது நல்ல வளர்ச்சி அல்ல. இதனால் இளைஞர்களின் எதி்ர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. குடிப்பழக்கத்தைக் குறைக்க மாற்று வழிகளை அரசு யோசிக்க வேண்டும்.
நாட்டில் நல்லாட்சி நிலவ காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் தான் முடியும். இதனால் காவல்துறையினருக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும். காவல்ல்துறையினரின் குழந்தைகளுக்கும் தனி பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் துவக்க வேண்டும் என்றார்.