டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-ஸ்டாலின் அறிவி்ப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500 ஊதியம் உயர்த்தப்பட்டு இனி அவர்கள் ரூ. 4000 சம்பளம் பெறுவார்கள்.
விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 2400 சம்பளம் ரூ. 2800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக மதுரையில் நடந்த டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இக் கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம், வாரவிடு முறை, சீரான இன்சென்டிவ், தேசிய பண்டிகை நாட்களில் விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
அனுமதியின்றி பார் நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்காக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.