ஓய்வு பெறும் வயதை குறைக்கும் ஏர் இந்தியா!
டெல்லி: செலவுக் குறைப்பு மற்றும் நஷ்டம் தவிர்ப்பின் அடுத்த நடவடிக்கையாக ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 55 ஆகக் குறைக்க பரிந்துரைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இதன்மூலம் தற்போது ஏர் இந்தியாவில் பணியில் உள்ள 31000 பணியாளர்களில் 4000 பேர் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
ஏர் இந்தியா இந்த திட்டத்தை அறிவித்துவிட்டாலும், இன்னும் இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளை ஏர் இந்தியா தன்னிச்சையாக மீறுவது போல இந்த நடவடிக்கை அமைந்துள்ளதே.
இந்தத் திட்டம் இப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைதச்சர் பிரபுல் பட்டேலிடம் தரப்பட்டுவிட்டது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் வேலையிழக்கும் 4000 பேரில், 70 முதல்நிலை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களும் அடங்குவர். ஏர் இந்தியாவின் பொதுமேலாளரும் கூட பதவியை இழப்பார்.