'வலுவாக இருக்கும் எல்டிடிஇ சர்வதேச கட்டமைப்பு'
கொழும்பு: சர்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இன்னும் கட்டுக் குலையாமல் வலுவாகவே உள்ளது என்று கூறியுள்ளார் பெல்ஜியத்துக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்கா.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐரோப்பாவில் புலிகள் அமைப்பின் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது. புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இங்கு அந்த அமைப்பின் நிலை மாறவில்லை.
இங்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புலிகளின் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது.
இந்த போக்குக்கு ஐரோப்பிய யூனியன் முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி விடும்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அனைத்துத் தமிழர்களும், இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு, ஐரோப்பிய யூனியன், கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் இன்னும் அகதிகள் அந்தஸ்தில்தான் உள்ளனர். அவர்கள் இலங்கையில் முழு அளவில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆரியசிங்கா.