For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி-அழகிரியால் தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது: அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

குன்னூர்: மு.க. அழகிரி தலைமையில் திருமங்கலம் மற்றும் லோக்சபா தேர்தலில் நடைபெற்ற அராஜகங்கள், வாக்குச் சாவடிப் பணியாளர்களாக ஈடுபட்ட ஆசிரியர்களை மிரட்டும் வகையில் தனித் தனியாக கடிதம் எழுதிய கருணாநிதி என தேர்தல் சுதந்திரமாக நடைபெற முடியாத சூழ்நிலை இருப்பதால்தான் சட்டசபைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று அதிமுக தீர்மானம் கூறுகிறது.

குன்னூரில் நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை அதிமுக எடுத்தது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழு விவரம்..

அழகிரி தலைமையில் அனைத்து அராஜகங்களும்...

மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்னர் திடீரென அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மு.க.அழகிரி தலைமையில் அனைத்துவிதமான அராஜகங்களும், வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டு, பணம் வாரி இறைக்கப்பட்டு, வாக்காளர்களும், அரசு அதிகாரிகளும் மிரட்டப்பட்டனர்.

எதிர்க்கட்சியினரை குறிப்பாக, அதிமுகவினரை அடித்து நொறுக்கி, காவல் துறையினரே ரெளடிகள் போல அதிமுக தொண்டர்களை லத்தி உடையும் வரை அடித்து, அவர்களை தேர்தல் பணியாற்ற விடாமல் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர்.

பண பலத்தையும், படை பலத்தையும், ரவுடிகள் பலத்தையும் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து திருமங்கலத்தில் நிகழ்த்திய சட்ட விரோதமான வெறியாட்டத்தை அனைவரும் பார்த்து திகைத்தனர்.

திருமங்கலத்தில் அதிமுகவிற்கு கிடைத்திருக்க வேண்டிய வெற்றி இத்தகைய முறைகேடுகளால் தட்டிப் பறிக்கப்பட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு மு.க.அழகிரி பெருமையாக, திருமங்கலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாணி இனிவரும் மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என பகிரங்கமாக அறிவித்தது, நாட்டில் இதுவரை காணாத மிகப்பெரும் வெட்கக்கேடு ஆகும். சொன்னபடியே செய்தும் காட்டிவிட்டார்.

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தனது ஐயத்தை அதிமுக தெரிவித்த போது, கருணாநிதி தங்களுடைய வெற்றி உண்மையானது எனக்கூறி அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது அதிகார வரம்பையும் மீறி இனிவரும் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுமென வலியுறுத்திக் கூறினார்.

இதையெல்லாம் பார்க்கும்போது உயர்ந்த அதிகார வட்டங்களில் பல முறைகேடுகள், பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

நடந்து முடிந்த 2009-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தும் கூட தேர்தல் அதிகாரிகளால் மிரட்டப்பட்டு பின்னர் திமுக வேட்பாளர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மக்களின் தீர்ப்பையே மாற்றி நிகழ்த்தப்பட்ட மாபெரும் மோசடியை எடுத்துரைத்து முறையிட்டும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகளே வெளியிட்டனர். அதன்படி 72.5 சத வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10 சத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட விவரங்களை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான வாக்குகள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல, தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் திமுகவினரால் பல வழிகளில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக செய்திகளும் வெளியாகின.

ஆசிரியர்களை மிரட்டிய கருணாநிதி...

தமிழகத்தின் முதல்வரே தமிழகத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திமுக நிறைய நன்மைகள் செய்துள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு அவர்கள் பணியாற்ற வேண்டுமெனவும் ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் அரசு பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான் என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் நேரத்தில் இத்தகைய ஒரு கடிதத்தை முதலமைச்சரே அனுப்பிய செயல் பகிரங்கமாகவே அவர்களை மிரட்டுகின்ற மற்றும் நிர்ப்பந்திக்கும் செயலாகும்.

தமிழகத்தில் நடத்தப்படவுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கும் என்கிற நம்பிக்கை அதிமுகவுக்கு இல்லையென அதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X