விடைத்தாள் மோசடி-டாக்டர், மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: புதுச்சேரி மருத்துக் கல்லூரியில் விடைத்தாளை மோசடியாக திருத்திய வழக்கில் பல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் அளித்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தியின் மகனான கிருபா ஸ்ரீதர் புதுச்சேரியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
அப்போது தேர்வில் சரியாக எழுதாத இவர், தனது தந்தையின் உதவியுடன், கல்லூரி ஊழியர்களை வளைத்து பெரும் பணம் கொடுத்து,விடைத்தாளை மாற்றியதாக கூறப்படுகிறது.
இதற்காக கல்லூரி அலுவலகத்தில் தனியாக ஒரு ரகசிய தேர்வை எழுதி அந்த விடைத்தாளை சேர்த்து மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, கிருபா ஸ்ரீதர்,
கல்லூரி ஊழியர் ஜெயராமன் மற்றும் ஒரு புரோக்கர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கும்படி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் கிருபாஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை முதலில் நீதிபதி ரகுபதி விசாரித்தார். அப்போது மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை வலியுறுத்தி, கிருஷ்ணமூர்த்தி, கிருபாஸ்ரீதருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாக புகார் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி நீதிபதி ரகுபதி விலகிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஜெயபால் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. அவர் இன்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கினார்.
கிருஷ்ணமூர்த்தியும், கிருபா ஸ்ரீதரும் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும்.
நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இருவரும் தலா ரூ.1 லட்சத்துக்கு ஜாமீன் தொகை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications