இடைத்தேர்தல் வெட்டி வேலை-ராமதாஸ்
சென்னை: இடைத்தேர்தல் என்பது வீண் வேலை. அதற்குப் பதிலாக திமுகவே அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அதிமுக தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்டு, அதைத் தடுக்க முடியவில்லை என்று சொல்லும்போது தேர்தல் என்பது எதற்கு?
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியான திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்குப் பதிலாக ஆளும் கட்சியே இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம்.
நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் பணம் விளையாடும். எனவே தேர்தல் புறக்கணிப்பு நல்ல முடிவு. இதன் மூலமாக எதிர்காலத் தேர்தல்களில், பணநாயகம் தலை தூக்காமல் உண்மையான, நேர்மையான தேர்தல் நடப்பதற்கு நாம் வழி வகை காண வேண்டும்.
தேர்தலில் பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தத் தேர்தல் செல்லாது என்று அன்றைக்கே அறிவிப்பதற்கான வழிமுறையும் காணப்பட வேண்டும்.
எனவே, மற்ற எதிர்க்கட்சிகளு போட்டியிடாமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார் ராமதாஸ். இது தேமுதிகவுக்கு ராமதாஸ் விடுக்கும் கோரிக்கையாகக் கருதப்படுகிறது.