இந்தியா-சீனா எதிரிகள் அல்ல: எஸ்.எம்.கிருஷ்ணா
புக்கெட்: தாய்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல, மாறாக நெருங்கிய கூட்டாளிகள் என்று கூறியுள்ளார்.
இந்திய - ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவில் நடக்கிறது.
இதற்காக சென்றுள்ள கிருஷ்ணா, அங்கு சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியேச்சியுடன் பேசினார். பின்னர் இந்திய செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சீனாவும், இந்தியாவும் பகையாளிகள் அல்ல. மாறாக நெருங்கிய கூட்டாளிகள் ஆவர்.
பொருளாதாரம், வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கலாம். ஆனால் இரு நாடுகளும் எதிரிகள் அல்ல. இந்தியாவும், சீனாவும் தனித் தனிப் பாதையில் வளர போதிய வாய்ப்புகள் உள்ளன.
சீன அமைச்சருடன் நடந்த பேச்சு உபயோகரமானதாக இருந்தது. தோழமையுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்தோம்.
சீனாவால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. நீடித்த நட்பு மற்றும் கூட்டுத்தன்மையை பேணிக் காக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை சீன அமைச்சரிடம் தெரிவித்தேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்த ஆண்டு இறுதியில் சீனா செல்லவுள்ளார். அதை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக சீன அமைச்சர் தெரிவித்தார் என்றார் கிருஷ்ணா.