ராஜினாமா செய்வேன்-கசாப் வக்கீல் திடீர் மிரட்டல்!
மும்பை: கசாப்புக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை. எனவே அவரது வக்கீலாக தொடர நான் விரும்பவில்லை. இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன் என்று கசாப்பின் வக்கீல் அப்பாஸ் கஸ்மி கூறியதால் மும்பை தனி கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப், சில தினங்களுக்கு முன்பு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தான். சதித் திட்டத்தையும் அவன் முழுமையாக விவரித்தான்.
ஆனால் கசாப் நாடகமாடுவதாக அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறினார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கசாப்பின் வக்கீல் அப்பாஸ் கஸ்மி குறுக்கிட்டு, கசாப்புக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள நான் விரும்புகிறேன் என்றார்.
இதனால் கோர்ட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், கசாப்புக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து விலகுவதாக கூறி நாடகமாடுகிறார் கசாப்பின் வக்கீல்.
ஆனால் தனது வக்கீல் மீது முழு நம்பிக்கை இருப்பதாக கசாப் கூறுகிறான். மனுதாரரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு கிரிமினல் வழக்கிலிருந்து வக்கீல் தானாக விடுபட முடியாது என்றார்.
இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்த நீதிபதி தஹிளியானி, கசாப் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து பின்னர் தீர்மானிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கசாப்பின் ஒப்புதல் வாக்குமூலத்தை கோர்ட் பதிவு செய்து கொள்ளும். அதை ஏற்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். சாட்சியங்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும். விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்.
இந்த வழக்கில் தீர்ப்பு கூற இது நேரமல்ல. (பின்னர் கசாப்பை பார்த்து) உன் மீது 86 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்திலும் நீ குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அடிப்படை குற்றத்தை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளாய். அதனால்தான் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்ற முடிவை கோர்ட் எடுத்துள்ளது என்றார்.
அதைக் கேட்ட கசாப், ஆகட்டும் சார் என்றான்.
பின்னர் வெளியில் வந்த அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கசாப் கொடுத்த வாக்குமூலத்தை குற்றத்தை ஒப்புக் கொண்டதாக மட்டுமே கோர்ட் எடுத்துள்ளது. அதை ஒப்புதல் வாக்குமூலமாக இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கசாப் ஒப்புக் கொல்ளவில்லை என்பதால் என்றார்.