ஆவின் பால் விலை உயருமா?
சென்னை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வோருக்கு அரசு விற்கும் பாலின் விலை உயர்த்தப்படுமா என்று தெரியவில்லை.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோது பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் பாலைக் கொட்டி அவர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டித்த முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பின் இது குறித்துப் பேசலாம் என்றார்.
சட்டப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் நலச் சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன், எ.வ.வேலு ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இரு சுற்றுப் பேச்சு நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் செங்கோட்டு வேலன் கூறுகையில்,
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வு குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் தலைவர் முகமது அலி கூறுகையி்ல், பசும்பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பாலுக்கு 6 ரூபாயும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கேட்டோம். பேச்சுவார்த்தை முடிவில் இதை ரூ. 3, ரூ.5 என்றாவது வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். முதல்வரிடம் பேசி, மீண்டும் எங்களை அழைத்து பேச்சு நடத்துவதாக கூறியிருக்கிறார்கள். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதற்கிடையே 1 லிட்டர் பசும் பாலுக்கு ரூ. 2ம், எருமைப் பாலுக்கு ரூ. 5 என கொள்முதல் விலை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி பசும் பால் கொள்முதல் விலை ரூ. 13.50லிருந்து ரூ. 15.50 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை ரூ. 18லிருந்து ரூ. 23 ஆகவும் உயரும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு இடைத் தேர்தல் முடிந்த பிறகே அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பாலை அதிக விலை கொடுத்து வாங்குவதால் அதை ஆவின் மூலம் நுகர்வோருக்கு விற்கும் விலையை அரசு உயர்த்துமா அல்லது பழைய விலைக்கே தருமா என்று தெரியவில்லை.