ஜாக்சன் மரணத்தில் திருப்பம் - டாக்டர் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு
ஜாக்சன் மரணத்திற்கான முக்கிய ஆதாரங்கள் கான்ராடின் அலுவலகத்தில் இருக்கக் கூடும் என்று போலீஸார் நம்புகின்றனர்.
மைக்கேகல் ஜாக்சன் மரணமடைந்தபோது கடைசி நேரத்தில் அவருடன் இருந்தவர் இந்த டாக்டர்தான். இவர் கடைசி நேரத்தில் போட்ட ஊசிகளும், கொடுத்த மருந்துகளும்தான் உயிரைப் பறித்ததாக ஒரு சந்தேகம் உள்ளது. இதனால்தான் இவரை ஆரம்பத்தில் விசாரித்த போலீஸார் தொடர்ந்து தங்களது சந்தேக வளையத்தில் வைத்துள்ளனர்.
இந்த சந்தேகம் வலுக்க காரணம், ஜாக்சன் குடும்பத்தினர் அவரது மரணம் குறித்த தகவல் அறிந்து வீட்டுக்கு வருவதற்குள் இந்த டாக்டர் அங்கிருந்து வேகமாகப் போய் விட்டார் என்பதே.
ஆரம்பத்தில் ஓவர் டோஸ் மருந்துகளால் ஜாக்சன் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இப்படித்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கூறுகிறது. ஆனால் தற்போது ஜாக்சன் மரணத்தை கொலையாக கருதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரணம், ஜாக்சனுக்கு கொடுக்கப்பட்ட புரோபோபால் என்ற மயக்க மருந்து அதிக அளவில் அவருக்கு செலுத்தப்பட்டுள்ளதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.
டாக்டர் கான்ராட் முர்ரேவின் அலுவலகத்தை போதைப் பொருள் தடுப்பு ஏஜென்சியைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், போலீஸார், எப்பிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
டாக்டரின் அலுவலகத்தில் இருந்த மருத்துவ ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, டாக்டரின் வக்கீல் செர்னாப் தனது இணையதளத்தில் கூறுகையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்து எதையும் டாக்டர் கான்ராட், ஜாக்சனுக்குப் பரிந்துரைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஜாக்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள், கொடுக்கப்பட்ட மருந்துகள் குறித்த ஆவணங்களை டாக்டரிடமிருந்து பெற போலீஸார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் கடைசி நேரத்தில் டாக்டர் கான்ராட் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்ததால் தற்போது பழி அவர் பக்கம் திரும்பியுள்ளதாக வக்கீல் செர்னாப் கூறுகிறார்.
போலீஸார் ஏற்கனவே டாக்டர் கான்ராடை 2 முறை விசாரித்துள்ளனர். அவரது காரையும் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.