குடியேற்ற விதிகள்-கடுமையாக்கிய ஆஸ்திரேலியா
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல ஆங்கில மொழிப் புலமை அவசியமாக்கப்பட்டுள்ளது.
இனிமேல் குடியுரிமை கோருவோருக்கு ஆங்கில மொழிப் புலமையை பரிசோதிக்கும் தேர்வுகள் கடுமையாக இருக்கும் என அந் நாட்டு குடியுரிமைத்துறை அறிவி்த்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் கீழ்நிலைப் பணிகளில் சேர விசா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு சாதாரண ஆங்கில மொழி பரிசோதனை தேர்வுகளே நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் இந்தத் தேர்வுகள் மிகக் கடுமையாக இருக்கும்.
International English Language Testing System (IELTS) தரத்திலான இந்தத் தேர்வில் வென்றால் தான் இனி விசா கிடைக்கும்.
இதுவரை சமையல், முடிதிருத்தல் போன்ற பணிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக விசாவும் முன்னிரிமையோடு குடியுரிமையும் தரப்பட்டு வந்தது. இந்தப் பணிகளில் சேர அதிகளவில் விண்ணப்பிப்பது இந்தியர்களே. இனி இவர்கள் குடியுரிமை பெறவும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத் தேக்கம் காரணமாக அந் நாட்டினருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தர இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இந்தாண்டு 2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாட்டினர் குடியேறியதால் அதன் ம்ககள் தொகை 4 லட்சம் அதிகரித்தது.
ஆஸி பிரதமர் வருகை..
இந் நிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் இந்தியா வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறுகையில்,
பிரதமர் கெவின் ரூட் இந்த வருடத்தின் இறுதியிலும், துணைப் பிரதமர் ஜூலியா கில்லர்டு செப்டம்பர் மாதத்திலும் இந்தியா வரத்திட்டமிட்டுள்ளனர் என்றார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு இரு தலைவர்களும் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications