ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதா தரப்பு உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட பெங்களூர் தனி கோர்ட், விசாரணையை, ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக் குவிப்பு மற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான இரு வழக்குகள் தொடரப்பட்டன. இவை இரண்டும் தற்போது பெங்களூர் தனி கோர்ட்டில் விசாரணையில் உள்ளன.
இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படாமல் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன.
இதையடுத்து லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற திமுக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பான காரணங்களைக் கூறும் ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, இதற்கு முன் ஆவணங்கள் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் ஜூலை 23ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல நீதிமன்றங்களில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் இதை ஏற்காத நீதிபதி, வாய்மொழியாக கூறக் கூடாது. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும்படி கூறி, விசாரணையை ஆகஸ்ட் 27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.