டிரைவருக்கு அடி-உதை: 5 போத்தீஸ் ஊழியர்கள் கைது
சென்னை: கடைக்கு ஜவுளி வாங்க வாடிக்கையாளரின் கார் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கிய போத்தீஸ் ஜவுளி நிறுவன ஊழியர்கள் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணையத்தில் முக்கியப் பொருப்பில் இருக்கும் தமிழரசுவின் உறவினர் ரமா. இவர் தி.நகரி்ல் போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு ஜவுளி வாங்க வந்தார்.
ரமாவின் காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக், ஜவுளி நிறுவனத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தினார்.
பின்னர் ரமா பர்ச்சேஸை முடித்து விட்டு வெளியே வந்தார். இதையடுத்து கார்த்திக் காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு இருந்த போத்தீஸ் ஊழியர்கள், கார் டோக்கனைக் கேட்டுள்ளனர்.
ஆனால் தான் டோக்கன் வாங்கவில்லை என்று கூறிய கார்த்திக், ஜவுளிக் கடையில் தந்த பில்களைக் காட்டியுள்ளார்.
ஆனால் அதை ஏற்காத ஜவுளிக்கடை ஊழியர்கள், கார்த்திக்குடன் வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் கார்த்திக்கை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்து கடைக்குள் இருந்த மேலும் சில ஊழியர்களும் ஓடி வந்து அவர்களும் கார்த்திக்கை அடித்தனர்.
இதைப் பார்த்து ரமா அதிர்ச்சி அடைந்தார். தாக்குதலை நிறுத்துமாறு அவர் கோரியும் தாக்குதலை நிறுத்தவில்லை போத்தீஸ் ஊழியர்கள்.
இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார். கார்த்திக்கைத் தாக்கிய பி.ஆர்.ஓ. கார்த்திக், செக்யூரிட்டி உலகநாதன், செக்யூரிட்டி அதிகாரி பாபு சாலமன், சூப்பர்வைசர் கிருஷ்ணசாமி, கடை ஊழியர் குமார் ஆகியோரைப் பிடித்து கைது செய்தார். மற்றவர்கள் கடைக்குள் ஓடி விட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களை கோர்ட்டில நிறுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
மிருகத்தனமாக தாக்கிய மற்ற ஊழியர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் கடைக்குள் போய் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.