துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சட்டத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனிடமிருந்து சமீபத்தில்தான் பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது. இதனால் அவர் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்பட்டது. சட்டசபையிலும் கூட அவர் முன்பு போல கலகலப்பாக இல்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்து கொண்டார்.
பின்னர் வீடு திரும்பிய அவருக்கு நெஞ்சு வலியும், மயக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது துரைமுருகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு துரைமுருகனுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்தது. சில மாதங்களுக்கு முன்பும் அவருக்க மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்து உடல் நலம் தேறினார் என்பது நினைவிருக்கலாம்.