சிதம்பரம் அருகே தந்தை-மகன் கொலை
சிதம்பரம்: காதல் விவகாரத்தில் சிதம்பரம் அருகே தந்தையும்-மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம் (65). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகன் முருகன் (32) மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல்
ராஜமாணிக்கம், கஸ்தூரி, முருகன் மூவரையும் கோடாரியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
இதில் ராஜமாணிக்கமும் முருகனும் அங்கேயே பலியாயினர். கஸ்தூரி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காதல் பிரச்சனையால் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
முருகனுக்கும், ராதா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந் நிலையில் முருகனுக்கும் பாண்டியன் என்பவரின் மகள் சத்தியாவுக்கும் (21) காதல் ஏற்பட்டுள்ளது. இதை சந்தியாவின் குடும்பம் கண்டித்துள்ளது.
மேலும் சத்தியாவின் தந்தை பாண்டியன், சகோதரர்கள் பாலகுரு (21), பார்த்திபன் (19) ஆகியோர் முருகனை நேரில் சந்தித்தும் கண்டித்தனர். ஆனால் அதன் பிறகும் முருகன்- சத்தியா காதல் தொடர்ந்துள்ளது.
இதனால் பிரச்சனை வெடிக்கவே முருகன் கடலூரில் உள்ள தனது அண்ணன் கணேஷ் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இந் நிலையில் நேற்று முருகனுக்கு பிறந்தநாள் என்பதால் புது மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அதை பெற்றோரிடம் காட்ட ஊருக்கு வந்தார். அப்போது தான் அவரை மர்ம கும்பல் தீர்த்துக் கட்டியுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட முருகன் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகராம். விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.