இடைத் தேர்தல்: ஜெயலலிதாவை மீறி மனு தாக்கல்!
சென்னை: இடைத் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நாளை கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.
5 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதுதொடர்பான முடிவை குன்னூரில் அதிமுக செயற்குழுவைக் கூட்டி ஜெயலலிதா எடுத்து அறிவித்தார்.
இடதுசாரிகள் தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதால் அடுத்து என்ன செய்வது, அவர்களை கூட்டணியிலிருந்து கழற்றிவிடுவதா என்பது குறித்து விவாதிக்க நாளை மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டத்தை கொடநாடு எஸ்ட்டேடில் கூட்டியுள்ளார் ஜெயலலிதா.
இடைத் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக மக்களிடம் கூட்டங்கள் நடத்தியும், பிரசாரம் செய்தும் விளக்கம் அளிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவை மீறி மனு தாக்கல்..
இந் நிலையில் இளையான்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி பொருளாளர் நாகராசு சுயேச்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கட்சியை விட்டு நீக்கம்..
இதையடுத்து அவர் கட்சியை விட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கைகள், குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு எதிராகவும், கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் கலங்கத்தை ஏற்படுத்திய ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இலக்கிய அணி பொருளாளர் பி.நாகராசு அந்த பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெ. தலைமையில் இயக்கம்-புதிய தமிழகம்:
இதற்கிடையே இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதை வரவேற்கிறோம். நாங்களும் அந்த வழியில் தேர்தலை புறக்கணிக்கிறோம். அதேபோல தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்.
குறிப்பாக பணம் கொடுத்து ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்படுவதை எதிர்த்து இந்தியா முழுவதும் ஓரு இயக்கம் துவக்க வேண்டும். இதற்கு ஜெயலலிதா முயற்சி செய்ய வேண்டும். இது அவரால் மட்டுமே முடியும். தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக ஜெயலலிதா சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார்.