இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் போட்டி: கூட்டணி 'டமார்'-நட்பு கட்சி அணுகியுள்ளது!!
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன.
இதன்மூலம் அதிமுகவின் தேர்தல் புறக்கணி்ப்பு முடிவை இந்தக் கட்சிகளும் நிராகரித்துவிட்டன. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் அதிமுக கூட்டணி பிளவுபட்டுவிட்டது.
முன்னதாக இடைத் தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிக்க அதை மதிமுக, பாமக ஆகியவை ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்டுகள் இந்த முடிவை ஏற்கவில்லை.
அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஒத்துக் போக நினைத்தாலும் மார்க்சிஸ்ட் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டது.
இதையடுத்து இரு கட்சிகளின் மாநில நிர்வாக குழுக் கூட்டங்கள் இன்று திருச்சியில் தனித்தனியே அவசரமாகக் கூடின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட கட்சி அலுவலகமான வெண்மணி இல்லத்தில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பாலபாரதி, நன்மாறன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 85 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் திருச்சி பெரியமிளகு பாறையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகமான ப.மாணிக்கம் இல்லத்தில் நடந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு, தேசியக் குழு உறுப்பினர் கோபு, துணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மகேந்திரன், எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், குணசேகரன், ராமசாமி உள்பட நிர்வாக குழு உறுப்பினர் 30 பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பின்னர் சந்தித்துப் பேசினர். தையடுத்து தேர்தலில் போட்டியிடும் முடிவை இரு கட்சிகளும் அறிவித்தன.
இது குறித்து வரதராஜன், தா.பாண்டியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.
பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.
நட்பு கட்சி அணுகியுள்ளது...
இளையான்குடி தொகுதியில் எங்களுடன் சேர்ந்து போட்டியிட ஒரு நட்பு கட்சி கேட்டுள்ளது. அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். ஆலோசனைக்குப் பின்னர் ஆதரவு தருவது குறித்து முடிவெடுப்போம்.
தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது அந்தக் கட்சியின் தனிப்பட்ட நிலைப்பாடு என்றனர்.
இதற்கிடையே, இடைத் தேர்தலில் விஜய்காந்தின் தேமுதிகவை இடதுசாரிகளுடன் கைகோர்க்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.