நிர்வாகிகளுடன் ஜெ. ஆலோசனை-அதிமுகவில் விரைவில் களையெடுப்பு?
இதில் மாவட்டச் செயலாளர்கள் தவிர கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
அதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு குறித்தும், அவர்களுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இடதுசாரிகளின் முடிவால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அதிமுக கூட்டணி பிளவுபட்டுவிட்ட நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெயலலிதா ரெஸ்ட் எடுத்து வரும் கொடநாடு எஸ்டேட்டில் டக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைமைக் கழக நிர்வாகிகள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சசிகலாவின் உறவினரான வெங்கடேஷ், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கும்,
சி.வி.சண்முகம், சேகர்பாபு, குமரகுரு, செ.ம.வேலுசாமி, சிவசாமி, எஸ்.பி.வேலுமணி உள்பட மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு விஷயத்தில் ஜெயலலிதாவின் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
இக் கூட்டத்தில் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் உறுப்பினர் சேர்ககை தொடர்பாக தனக்கு தரப்பட்டுள்ள விவரம் தொடர்பாகவும் கட்சியினருடன் ஜெயலலிதா விவாதம் நடத்துவார் என்று தெரிகிறது.
கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் குளறுபடி...
அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்களும், இளைஞர், இளம்பெண் பாசறை அமைப்பில் 45 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர் என்று நிர்வாகிகள் ஜெயலலிதாவிடம் கணக்கு காட்டுகின்றனர்.
ஆனால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இந்த வாக்குகள் கூட கிடைக்கவி்ல்லை. அப்படியானால் உறுப்பினர்கள் கூட அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக தன்னிடம் கட்சி நிர்வாகிகள் தரும் கணக்கில் தான் தவறு இருப்பதாக ஜெயலலிதா கருதுகிறார். இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு இன்றைய கூட்டத்தில் டோஸ் கிடைக்கும் என்று தெரிகிறது.
மேலும் கட்சிக்கு உண்மையான உறுப்பினர்களை சேர்க்க அவர் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்திலும் மக்களவைத் தேர்தலில் சரிவர பணியாற்றாத மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களை களை எடுக்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதால் திக் திக் மனநிலையில் தான் இன்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விரைவில் களையெடுப்பு?..
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாநில, மாவட்ட அளவி்ல் நிர்வாகிகளை ஜெயலலிதா கூண்டோடு மாற்றலாம் என்று தெரிகிறது.