தமிழர் பாதுகாப்பு: இனி கருணாநிதியிடம் கேட்க மாட்டோம்-ராமதாஸ்

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுக்கக்கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வீரபாண்டியன், இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் ராமதாஸ் பேசுகையில்,
இலங்கையில் போராளிகளை அழித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அங்குள்ள 3.5 லட்சம் தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள். இதை தடுக்க உலக நாடுகள் ஏன்? முன்வரவில்லை. மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதா?
ஐ.நா. சபையின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளன. இத்தனை அதிகாரம் உள்ள ஐ.நாவால் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. குறைந்தபட்சம் முகாம்களின் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையாவது ஐ.நா. ஏற்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கு மிச்சம் உள்ள போராளிகளை அழிக்கப் போகிறார்கள்.
இலங்கையில் நடைபெற்று வருவது ஒரு திட்டமிட்ட சதி, போராளிகளை அழிக்கும் சதி. இந்திய அரசால் திட்டமிடப்பட்டு, இலங்கை அரசால் நடத்தப்படுகிறது.
விடுதலைக்குப் போராடிய எந்த இனமும் அழிந்ததாக வரலாறு இல்லை. வெற்றி பெற்றதாகத்தான் வரலாறு உண்டு.
உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் உசுப்பி விடப்பட்டிருக்கிறார்கள். வெற்றி பெறும் வரை இனி ஓயமாட்டோம். இலங்கையில் தனி ஈழம் தவிர எதுவும் தீர்வாகாது.
செங்கல்பட்டில் எட்டு நாள்களாக உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுக்காவது தமிழக அரசு கருணை காட்ட வேண்டும். இதைத் தவிர நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
இந்திய அரசு கொடுத்த ரூ.500 கோடி உதவி தொகை இலங்கையில் வதைபடும் தமிழர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இலங்கைத் தமிழர் விடுதலை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எதுவும் கேட்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டோம். ஏனென்றால் கேட்டாலும் எந்தவிதப் பயனும் இல்லை.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்டு 20ம் தேதி ஒரு பிரகடனத்தை வெளியிட உள்ளோம். அப்போது, இங்குள்ள தமிழர்கள் மேலும் எழுச்சி அடைவார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications