ஒரிசா சட்டசபைக்குள் புகுந்த பாம்பு பாதுகாவலரை கடித்தது
புவனேஸ்வர்: ஒரிசா மாநில சட்டசபைக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு, துணைப் பாதுகாவலரை கடித்து விட்டது.
ஒரிசா சட்டசபைக்குள் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதைக் கண்டு பிடிக்க முடியாமல் பாப்பாடிகள் திணறினர். இந்த களேபரம் காரணமாக ஒரு நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பிடிக்க சட்டசபை பாதுகாவலர்கள் முயன்றனர். அப்போது துணைப் பாதுகாவலர் ஒருவரை பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அந்த பாம்பை பாம்பாட்டிகள் வளைத்துப் பிடித்தனர். நேற்று சட்டசபைக் கூட்டம் பாம்பாட்டிகள் துணையுடன் நடந்தது. கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் ஒரு இருக்கையின் கீழே பாம்பு நெளிவதை பாம்பாட்டிகள் பார்த்து விட்டனர்.
இதையடுத்து விரைந்த பாம்பாட்டிகள் அந்தப் பாம்பைப் பிடித்தனர். இது சாதாரண விஷம் இல்லாத பாம்பு என்று பாம்பாட்டி மாலிக் என்பவர் கூறினார். பாம்பு முதலில் மாலிக்கைக் கடித்துள்ளது. பின்னர்தான் துணைப் பாதுகாவலரான அமியா சத்பதி என்பவரைக் கடித்தது.
மாலிக்குக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் சத்பதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வழியாக பாம்பு பிடிபட்டு விட்டதால் சட்டசபை வட்டாரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. இருப்பினும் இது ஏற்கனவே உள்ளே நுழைந்த பாம்பா அல்லது வேறு புதுப் பாம்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications