ஆடிப்பெருக்கு: ஜூலை 28ம் தேதிய மேட்டூர் அணை திறக்கப்படுகிறது
சென்னை: ஆடிப் பெருக்கு விழாவையொட்டி ஜூலை 28ம் தேதியே மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7ம் தேதியன்று நீர்ப்பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
ஆனால் ஆடிப் பெருக்கு வருவதால் அதற்கு வசதியாக முன்கூட்டியே காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ஜூலை 28ம் தேதியே அணை திறக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
21.7.2009 அன்று தமிழக சட்டமன்ற பேரவையில் நான் படித்தளித்த அறிக்கையில்- காவேரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 7.8.09 முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை அறிவித்தேன்.
இருந்த போதிலும்- பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று- அவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி அன்றே மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
90 அடியைத் தாண்டியது நீர்மட்டம்...
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிக அளவில் உள்ளதால் விரைவில் அணை 100 அடியைத் தாண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.