ராமலிங்க ராஜுவுக்கு சிறையில் ராஜ உபசாரம்!
ஆம்... சிறையில் தனது 200வது நாளை வெற்றிகரமாகக் கழித்த ராஜுவுக்கு, சிறைக் காவலர்கள் ராஜ உபசாரம் செய்து வருகின்றனர்.
தங்களது பல வேலைகளை சிறையிலிருந்தபடியே வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம் ராஜுவும் அவர் சகோதரரும்.
சிறையில் அவருக்கு தனி சமையலறை தரப்பட்டுள்ளதாம். ஆந்திராவின் காரசாரமான உணவுகளும், ஸ்பெஷலாக வரவழைக்கப்படும் மீன் உணவுகளும் அவர்களுக்கு தரப்படுகின்றனவாம்.
ஷட்டில் விளையாட தனி மைதானமே ஒதுக்கப்பட்டுள்ளதாம். ராமலிங்க ராஜூ போன்ற பி வகுப்பு கைதிகளுக்கு இந்த வசதிகள் பொதுவாகக் கிடையாதாம். ஆனால் இவர்களோ அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்களாம்.
பொதுவாக சிறையில் எந்த வகுப்புக் கைதிக்கும் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் ராஜு சாதாரணமானவரா... ரூ.7800 கோடி மோசடி செய்த 'மன்னன்' அல்லவா... அவருக்கு மட்டும் விசேஷமாக செல்போன் அனுமதிக்கிறார்கள் சிறை நிர்வாகத்தினர்.
இந்த செல்போன்கள் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இங்கிருந்தபடியே பங்குகள் மற்றும் வழக்குகள் விவகாரத்தில் டிப்ஸ் கொடுக்கிறார்களாம் ராஜு சகோதரர்கள்.
தெலுங்கு பத்திரிகைகளில் இப்போது பரபரப்பாக எழுதப்படுவது ராஜூக்கள் சிறையில் அனுபவிக்கும் இந்த சூப்பர் வசதிகள் பற்றித்தான்.