இந்திய வீரர்களையும் சுட்ட இலங்கை கடற்படை-கையைத் தூக்கி சரணடைந்த கொடுமை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பழுதடைந்த தமிழக மீனவர்களின் படகைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல் படையினரை நோக்கி இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டுள்ளனர். இதையடுத்து உயிர் தப்புவதற்காக இந்திய கடலோரக் காவல் படையினர் கைகளை மேலே தூக்கி சரணடைவது போல நின்றார்கள் என்று கூறியுள்ளனர் மீனவர்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு ஒன்று பழுதடைந்து நின்று விட்டது.
கச்சத்தீவு அருகே நின்று போன அந்தப் படகில், சதீஷ், ஜோசப், அந்தோணி, முனியசாமி ஆகிய மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இவர்களை மீட்பதற்காக மீன்வளத்துறையின் அனுமதியுடன் 10 மீனவர்கள், 2 படகுகளில் விரைந்தனர்.
கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை இலங்கை கடற்படையினர் மீன் துறை அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து பழுதடைந்து நின்ற படகை கயிறு கட்டி இழுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஹோவர்கிராப்ட் மூலம் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் வந்தனர்.
பழுதடைந்த படகை மீட்கும் முயற்சியை அவர்கள் பார்த்துக் கொண்டிருநதனர். அந்த சமயத்தி்ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் அங்கு விரைந்து வந்துள்ளன.
வந்த வேகத்தில் அவர்கள், இந்திய கடலோரக் காவல் படையினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதை எதிர்பார்க்காத இந்திய கடலோரக் காவல் படையினர், கைகளை மேலே தூக்கியபடி நின்றனராம்.
படகை மீட்கச் சென்றவர்களும், சிக்கித் தவித்த மீனவர்களும் மரண பீதியில் படகுகளுக்குள் பதுங்கிக் கொண்டனராம்.
பின்னர் கடலோரக் காவல் படையினரை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி விட்டுப் போய் விட்னராம்.
அதன் பின்னர் தமிழக மீனவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் கூறுகையில், நமது நாட்டு கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம்.
இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை. எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு என்றே தெரியவில்லை என்று குமுறினர்.
இலங்கை கடற்படை கிட்டத்தட்ட ஒரு ரவுடிக் கும்பலாகவே மாறிப் போய் விட்டது. யாரைப் பார்த்தாலும் சுடும் மனோ பாவத்திற்கு அவர்கள் வந்து விட்டனர். அதை சுட்டு, இதைச் சுட்டு இப்போது இந்திய படையினரையே சுடும் அளவுக்கு அவர்களுக்கு கொழுப்பு கூடி விட்டது.
அதைவிடக் கொடுமை, அவர்களைப் பார்த்து நமது வீரர்கள் கையை மேலே தூக்கி சரணடைந்தது போல நின்றதுதான்.
மத்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது.