திமுக - காங் வேட்பாளர்கள் மனு தாக்கல் - மனுத்தாக்கல் முடிவடைந்தது
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இன்று திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
கம்பம், தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி. நேற்று கம்பம் தொகுதி திமுக வேட்பாளர், சிபிஎம் வேட்பாளர்கள் உள்பட 31 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இன்று பர்கூர் திமுக வேட்பாளர் நரசிம்மன், இளையாங்குடி வேட்பாளர் சுப. மதியரசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி, தொண்டாமுத்தூர் வேட்பாளர் கந்தசாமி ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
பர்கூரில் 14 பேர்
பர்கூர் தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், நரசிம்மன் (திமுக), சந்திரன் (தேமுதிக), அசோகன் (பா.ஜ.க) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சுயேச்சைகள்.
கம்பம் தொகுதியில் ராமகிருஷ்ணன் (திமுக), வசந்தன் (திமுக மாற்று), அருண்குமார் (தேமுதிக), முருகேசன் (தேமுதிக மாற்று), சசிகுமார் (பா.ஜ.க), குமரன் (பா.ஜ.க மாற்று), ராஜப்பன் (சிபிஎம்) உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்து தொண்டாமுத்தூரில் எம்.என்.கந்தசாமி (காங்), தங்கவேலு (தேமுதிக), சின்ராஜ் (பா.ஜ.க), ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்ற கழகம்) உள்ளிட்ட 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இது வரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சுடலையாண்டி (காங்கிரஸ்), சவுந்தரபாண்டியன் (தேமுதிக.), சந்தனகுமார் (பா.ஜ.க) ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சுயேச்சைகள் ஆவர்.
சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி இன்று மனுத் தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடன் வந்திருந்தார்.
இளையாங்குடி தொகுதியில், திமுக வேட்பாளர் சுப.மதியரசன், தேமுதிகவின் அழகு பாலகிருஷ்ணன், பாஜகவின் ராஜேந்திரன் உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications