For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாயை தாக்கி கொள்ளையடித்த மகள்-தோழி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தனது காதலனுடன் வாழ்வதற்காக, அதற்குத் தேவைப்பட்ட பணத்துக்காக, தனது தோழியுடன் சேர்ந்து தாயைத் தாக்கி கொள்ளையடித்த மகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ரெயில்வே ஊழியர் ராஜசேகர். இவரது மனைவி வத்சலா தேவி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்தார்.

வத்சலாதேவியும், திவ்யாவும் சம்பவ நாளன்று வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, 2 பெண்கள் வந்து மயக்க பொடி தூவி நகை- பணம் கொள்ளையடித்து சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வத்சலாதேவி தலையில் குத்து விளக்கால் தாக்கிய காயம் இருந்தது. மகளுக்கு காயம் இல்லை. இதனால் மகள் திவ்யா மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் விசாரித்தபோது காதலனுக்காக தோழியுடன் சேர்ந்து தாயை தாக்கி நகை- பணம் பறித்ததை ஒப்புக் கொண்டார்.

சூளைமேட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரைக் காதலித்து வந்தார் திவ்யா. அவருடன் வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தவும் தயாரானார்.

ஆனால் இந்தப் பொருளாதார மந்த நிலையில் காசு இல்லாமல் குடும்பம் நடத்த முடியாதே... இதனால் குடும்பம் நடத்தத் தேவையான பணத்தை தனது வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டமிட்டார் திவ்யா.

தனது தோழி தனலட்சுமியை அழைத்து கொள்ளைக்காரி போல நடித்து தனது தாயாரைத் தாக்கி நகை, பணத்தை அள்ளிச் செல்லத் திட்டமிட்டார்.

அதன்படி தனலட்சுமியும் சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வந்தார். திவ்யா சொன்னபடி அவரது தாயைத் தாக்கியுள்ளார். அப்போது குத்துவிளக்கை எடுத்து திவ்யாவும் தன் பங்குக்கு தனது தாயாரைத் தாக்கியுள்ளார்.

பின்னர் நகை, பணத்துடன் தனலட்சுமி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து தனலட்சுமி, திவ்யா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனை கொலை செய்து பிரிட்ஜில் வைத்தார் ஒரு தாய். சென்னையிலோ, காதலனுடன் வாழ்வதற்காக தாயைத் தாக்கி கொள்ளையடித்துள்ளார் ஒரு பெண்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X