அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் உள்ள மாஜி எம்.பிக்கள்
டெல்லி: முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெகதீஷ் டைட்லர், கன்ஷிராம் ரானா உள்ளிட்ட 36 முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு தொடருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள லூட்யென் பகுதியில் இந்த 36 பேரும் இன்னும் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
மேற்கண்டவர்கள் தவிர ராம் விலாஸ் பாஸ்வான், மகாவீர் பிரசாத், காந்தி சிங் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் அடங்குவர்.
சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய நகர்ப்புற அமைச்சகம்.
இவர்களைக் காலி செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டப் பிரிவுக்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரி்ந்துரைத்துள்ளதாம்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.கணேசன், ராதிகா செல்வி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மணிசங்கர் அய்யர் ஆகியோரும் அடக்கம்.
இதுதவிர காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் அமைப்பதற்காக நான்கு பங்களாக்களும், பாஜகவுக்கு 2 பங்களாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications