மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவகாரம் - அரசியல் சதி: பூட்டாசிங்
நாசிக்கைச் சேர்ந்தவர் ராம் ராஜ் பாட்டீல். இவர் துப்புறவு காண்டிராக்டர் ஆவார்.
நாசிக் மாநகராட்சியின் துப்புறவுப் பணிகளையும் இவர்தான் காண்டிராக்ட் எடுத்துள்ளார். இவரிடம் 100க்கும் மேற்பட்ட துப்புறவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கி வந்துள்ளார் பாட்டீல். மேலும், ஊழியர்களின் பெயரில் ரூ. 10 கோடிக்கு வங்கியில் கடனும வாங்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த துப்புறவுப் பணியாளர்கள் பாட்டீல் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், பூட்டா சிங்கின் மகன் சரப்ஜித் சிங் என்கிற ஸ்வீட்டி சிங், துப்புறவுத் தொழிலாளர்களை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சுமூகமாக முடித்து வைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், ராம்ராஜ் பாட்டீலையும் தொடர்பு கொண்டு ரூ. 3 கோடி கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறச் செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கு ஆரம்பத்தில் பாட்டீல் ஒத்து வரவில்லை. பின்னர் பேரம் பேசி ரூ. 1 கோடிக்கு ஒப்புக் கொண்டார் பாட்டீல். மேலும், டெல்லியில் வைத்துப் பணத்தைத் தருவதாக கூறிய அவர் சிபிஐக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சிபிஐ வலை விரித்துக் காத்திருந்தது. நேற்று ஸ்வீட்டி சிங்கிடம், பாட்டீல் பணத்தைக் கொடுத்தபோது மறைந்து இருந்த சிபிஐ அதிகாரிகள் ஸ்வீட்டி சிங்கைக் கைது செய்தனர்.
ஸ்வீட்டிக்கு ஹவாலா மோசடிகளிலும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் விசாரித்து வருவதாக சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.ஆர்.சிங் மும்பையில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனூப் பகே என்பவரை முதல் தவணைப் பணத்துடன் ஜூலை 28ம் தேதி மும்பையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
பூட்டா சிங்கின் மகனிடம் லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்காக கிளம்பியபோது அவர் சிக்கினார்.
பூட்டா சிங் முன்னிலையில்தான் பேச்சு...
சிபிஐ அதிகாரிகளிடம் பகே பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பூட்டா சிங்கின் வீட்டில் வைத்துதான், அவரது முன்னிலையில்தான் லஞ்சம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. பூட்டா சிங் சார்பாகத்தான் ஸ்வீட்டி சிங் செயல்பட்டார் என்று கூறியுள்ளார்.
பூட்டாசிங்கின் பெயரும் இந்த வழக்கில் அடிபடுவதால் காங்கிரஸ் வட்டாரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசியல் சதி - பூட்டா சிங்
இந்த விவகாரம் குறித்து பூட்டா சிங் கருத்து தெரிவிக்கையில், இது எனக்கு எதிரான, எனது குடும்பம், தொழிலுக்கு எதிரான பெரும் அரசியல் சதியாகும்.
நான் பீகார் ஆளுநராகப் பொறுப்பேற்றபோதும் எனது மூத்த மகனை வைத்து இதேபோன்ற வேலை நடந்தது.
இந்த சம்பவத்தில் சில அரசியல் சக்திகளுக்குத் தொடர்பு உள்ளது. அவர்களது வற்புறுத்தலின் பேரில்தான் எனது மகனைக் கைது செய்ய வைத்துள்ளனர்.
என் மீது புகார் கூறும் நபர் (பகே) மீது 11 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நான் எனது தலித் ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்றார் பூட்டா சிங்.