கோவாவை நோக்கி மர்மக் கப்பல் வருகை - கடற்படை உஷார்

கொங்கன் கடற்கரை முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் போலீஸார், கோவா போலீஸாருக்கு இதுகுறித்த தகவலை அனுப்பினர். மர்மமான முறையில் ஒரு கப்பல் கோவாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அந்தத் தகவல் கூறியது.
இதையடுத்து கோவா போலீஸார் இந்திய கடற்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் மனோகர் நம்பியார் கூறுகையில், மர்மமான முறையில் கப்பல் ஒன்று வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அதுகுறித்து தீவிரமாக கண்காணி்த்து வருகிறோம்.
மீனவர்கள்தான் சிந்துதுர்க் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள்தான் கோவா போலீஸாரை உஷார்படுத்தினர்.
என்ன மாதிரியான கப்பல் என்பது குறித்து தகவல் இல்லை. பெரிய கப்பலாகவும் இல்லாமல், சிறிய படகாகவும் இல்லாமல் அந்தக் கப்பல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது கடற்படையும், கடலோரக் காவல் படையும் இறங்கியுள்ளன என்றார்.
கோவா மாநிலக் கடலோரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மர்மமான முறையில் யாராவது நடமாடுகிறார்களா, படகு அல்லது சிறிய கப்பல்களில் யாரேனும் வந்திறங்குகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையைப் போலவே நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியைப் பயன்படுத்தி லஷ்கர் அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என ஏற்கனவே உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால் கோவா நோக்கி வரும் கப்பல் குறித்து தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications