குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ஹேர்பின்!
நெல்லை: நாசரேத்தை சேர்ந்த 10 மாத குழந்தையின் நுரையிரலில் சிக்கிய ஹேர் பின் நெல்லை மருத்துவமனையில் அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஸ்டான்லி என்பவரின் 10 மாதக் குழந்தை டெர்லின். இந்த குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி வருவதாகவும், 10 மாதமாக குழந்தை எடை கூடாமல் இருப்பதாகவும் கூறி குழந்தையின் பெற்றோர் கடந்த 12ம் தேதி நாசரேத் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.
குழந்தைக்கு எஸ்க்ரே எடுத்து பரிசோதித்த டாக்டர் கிங்ஸ்லி ராபர்ட் குழந்தையின் நுரையிரலில் ஆறரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஹேர் பின் இருப்பதாகவும் இதன் காரணமாகதான் மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதாகவும் கூறி பாளை ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தார்.
அங்கு டாக்டர் ராஜேஷ் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் ஹேர் பின் குடலை கிழித்து கொண்டு இடதுபக்க நுரையிரலை பிடித்து கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆபரேசன் செய்து ஹேர் பின்னை எடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 14ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் டாக்டர் வைகுண்டராஜன் ஹேர் பின்னை அகற்றினார்.