பூட்டா சிங்கை விசாரிக்க சிபிஐ முடிவு - மகன் வீட்டில் ரெய்டு
டெல்லி: தேசிய எஸ்.சி, எஸ்.டி. கமிஷன் தலைவர் பூட்டா சிங்கின் சரப்ஜித் சிங் என்கிற ஸ்வீட்டி சிங் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், பூட்டா சிங்கின் பெயரும் அடிபடுவதால் அவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
நாசிக்கைச் சேர்ந்த ராமாராவ் பாட்டீல். இவர் நாசிக் மாநகராட்யின் துப்புறவுப் பணி காண்டிராக்டை எடுத்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்ட துப்புறவுத் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார். அவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால், பாட்டீல் மீது துப்புறவுத் தொழிலாளர்கள் தலித் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், பாட்டீலை அணுகிய பூட்டாசிங்கின் மகன் ஸ்வீட்டி சிங், துப்புறவுத் தொழிலாளர்களின் வழக்கை தான் வாபஸ் பெறச் செய்ய உதவுவதாகவும், அதற்காக ரூ. 3 கோடி கொடுக்குமாறும் பேரம் பேசியுள்ளார்.
ஆனால் இதற்கு பாட்டீல் ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியில் ரூ 1 கோடிக்கு இறங்கி வந்தார் பாட்டீல். மேலும், சிபிஐக்கும் இதுகுறித்து அவர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி ஸ்வீட்டி சிங்கிடம் பாட்டீல் பணத்தைக் கொடுத்தபோது கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனூப் பகே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ்காரர். இவரிடம் விசாரணை நடத்தியபோது, பூட்டா சிங் வீட்டில், அவர் முன்னிலையில்தான் பேரமே நடந்தது என்றார். ஆனால் இதை பூட்டா சிங் நேற்று மறுத்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்வீட்டி சிங் கொடுத்த வாக்குமூலத்தில் தான் பணம் வாங்கியது தனது தந்தைக்குத் தெரியும் என்று கூறியுள்ளதால் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பூட்டா சிங்கையும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் பூட்டாசிங்குக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மெளனம்..
பூட்டாசிங் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மெளனமாக உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மட்டும் காங்கிரஸ் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீட்டி வீட்டில் ரெய்டு
இதற்கிடையே தெற்கு டெல்லியில் உள்ள பூட்டாவின் மகன் சரப்ஜித் சிங் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3 கைத்துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள் சிக்கின.
இதையடுத்து அவர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.