வள்ளுவர் சிலை திறப்பு - பெங்களூர் சென்றார் கருணாநிதி

இன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் முதல்வர் பெங்களூர் சென்றார்.
அவருடன் மனைவி தயாளு அம்மாள், பிசியோதெரபிஸ்ட், டாக்டர் கோபால் உள்ளிட்டோரும் சென்றனர்.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அல்சூர் ஏரி அருகே உள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் சில கன்னட அமைப்புகளின் போராட்டம் காரணமாக சிலை திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போதைய முதல்வர் எதியூரப்பா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளால் இந்த தடை நீங்கி திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது. அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலை திறக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலையும், 13ம் தேதி சென்னையில் சர்வஞ்னா சிலையும் திறக்கப்படுகிறது.
சிலை திறப்புக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவியையும் அளித்துள்ளது. சிலை திறப்பையொட்டி முதல்வர் கருணாநிதி இன்றே பெங்களூர் சென்றுள்ளார். தனது மகள் செல்வி வீட்டில் முதல்வர் தங்குகிறார்.
9ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் எதியூரப்பாவுடன் கலந்து கொண்டு சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.
முதல்வரின் பெங்களூர் பயணத்தின்போது முதல்வர் எதியூரப்பாவையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது. இருப்பினும் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக முதல்வர்கள் இருவரும் பேசுவார்களா என்பது தெரியவில்லை.
இரு மாநிலங்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் எதிரும் புதிருமான இரு கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இரு மாநில முதல்வர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த தோழமை இரு மாநிலங்களுக்கும் நன்மை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications