மாஜி டிஜிபி உறவினராக நடித்து எஸ்பியை ஏமாற்ற முயன்றவருக்கு காப்பு
நெல்லை: நண்பருக்கு உதவுவதற்காக நெல்லை எஸ்பியிடம் முன்னாள் டிஜிபியின் உறவினர் என்று நடித்து ஏமாற்ற முயன்ற திருப்பூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று பகல் 2.30 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மிடுக்காக வந்தார். அங்கு காவலுக்கு நின்ற ஆயுதப்படை வீரர் எர்னஸ்ட் ஆபிரகாமிடம் தான் முன்னாள் டிஜிபி ஸ்ரீபாலின் உறவினர் என்றும் ஒரு புகார் தொடர்பாக எஸ்பியை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கர்க் அவரை சந்திக்க உடனடியாக அழைப்பு விடுத்தார். சந்திப்பின் போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த எஸ்பி அவரிடம் தீர விசாரித்தார்.
அதில் அவர் திருப்பூர் கோல்டன்புரம் ஜெயலட்சுமி நகர் 12வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சதிஷ் என்றும் தனது நண்பரான சேட் ஒருவரின் வாகன பைனான்ஸ் விவகாரத்திற்காக தவறான தகவல் அளித்து எஸ்பியிடம் சிபாரிசு கோர வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பாளை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து சதீஷை கைது செய்தனர்.
கைதான சதீஷ் திருப்பூரில் தனது மைத்துனருக்கு சொந்தமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். டிஐஜி ஸ்ரீபாலை பற்றி ஒரு தகவலும் தெரியாததால் எளிதில் சிக்கிக் கொண்டார்.