துறைமுகங்களில் லட்சக்கணக்கான டன் துவரம் பருப்பு தேங்கிக் கிடக்கும் அவலம்
நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை மகா வேகமாக ஏறிக் கிடக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் நமது நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் லட்சக்கணக்கான டன் துவரம் பருப்பு எடுக்க ஆளில்லாமல் தேங்கிக் கிடக்கிறதாம்.
இதுதவிர ரூ. 1600 கோடி மதிப்புள்ள சர்க்கரையும் கூட தேங்கிக் கிடக்கிறதாம். இவையெல்லாம் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதா என்று தெரியவில்லை.
இவை அனைத்தும் உரிய முறையில் வெளிச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் விலை வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளதாம்.
பல்வேறு பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6.19 லட்சம் டன் பருப்பு மற்றும் சர்க்கரையை எடுக்க யாரும் வராததால், இந்த அவல நிலை. இந்தப் பொருட்களின் தரம் குறித்து ஆராய்ந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். அந்தப் பணி தாமதமாகி வருவதால் இப்படி லட்சக்கணக்கான பருப்பும், சர்க்கரையும் தேங்கிக் கிடக்கிறதாம்.
நீண்ட நாட்களாக இவை தேங்கிக் கிடப்பதால் அழுகிப் போகும் வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதுகுறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரிடம் கேட்டதற்கு, எனக்குத் தெரியாது என்று மகா பொறுப்பாக பதிலளித்துள்ளார்.