ஒரு கட்சியின் தூண்டுதலால் என்னைப் பலிகடாவாக்குகிறது சிபிஐ - பூட்டா சிங்
டெல்லி: எனது மகன் சரப்ஜோத் சிங் கைது விவகாரத்தில் ஒரு அரசியல் கட்சியின் சதி உள்ளது. அந்தக் கட்சியின் தூண்டுதலால்தான் எனது மகனைக் கைது செய்த சிபிஐ இபபோது என்னையும் பலிகடாவாக்க முயலுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத் தலைவர் பூட்டா சிங்.
துப்புறவு காண்டிராக்டர் ராமாராவ் பாட்டீல் என்பவரிடமிருந்து ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சரப்ஜோத் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது வீட்டையும் ரெய்டு செய்து அங்கிருந்து துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். அது தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கியது பூட்டா சிங்கின் ஆலோசனையின்பேரில்தான் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பூட்டாவையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சுத்தமாக பூட்டா சிங்கை கைகழுவி விட்டது.
இந்த நிலையில் சிபிஐயின் நடவடிக்கைக்கு ஒரு அரசியல் கட்சியே காரணம் என்று பூட்டா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு அரசியல் கட்சியின் சதியே இந்த நடவடிக்கைகளின் பின்னணியாகும். புலனாய்வு அமைப்பாக சிபிஐ செயல்படவில்லை. ஆனால் குற்றவாளி ஒருவருடன் சேர்ந்து கொண்டு என்னையும், எனது மகனையும், பலிகடாவாக்க முயலுகிறார்கள்.
என்னைப் பழி தீர்ப்பதற்காக எனது மகனை பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து நான் பிரதமரிடம் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். யாரையும் நான் இப்போது குற்றம் சாட்ட விரும்பவில்லை. நேரம் வரும்போது நான் பேசுவேன். உரிய முறையில் உரிய இடத்தில் அதைத் தெரிவிப்பேன்.
உரிய முறையில் என்னை விசாரிக்க சிபிஐ வந்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறைக்கு எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.