காந்தியின் போதனைகள் குறித்து நூல் எழுத கார்டன் பிரவுன் விருப்பம்
லண்டன்: மகாத்மா காந்தியடிகள் அமைதி, அன்பு குறித்த போதித்த போதனைகள் குறித்து உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில், நூலாக எழுத விரும்புவதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
இதுகுறித்து குஜராத்தைச் சேர்ந்த ஆங்கில வார இதழான கரவி குஜராத்-த்துக்கு பிரவுன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
20ம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. அவர் போதித்த அகிம்சை, அன்பு, அமைதி போன்ற தத்துவங்கள், இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது. இன்றைக்கும் பொருந்தும் வகையிலான ஒப்பற்ற தத்துவம் அது.
அதுகுறித்தும், உலக நாகரீகத்திற்கு காந்தியடிகள் ஆற்றிய பங்கு குறித்தும் உலக மக்களுக்குத் தெரியும் வகையில் நூலாக எழுத விருப்பம் கொண்டுள்ளேன்.
காந்தியடிகள் ஒருபோதும் பதவியின் பின்னால் திரிந்ததில்லை. மக்கள் மனதையும், இதயங்களையும் கொள்ளை கொண்டவர் அவர். மக்களிடத்திலும் அவர் அன்பையும், அமைதியையும், சகிப்புத்தன்மையையும் விதைத்தார் என்று கூறியுள்ளார் பிரவுன்.